தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 25 Jan 2020 10:00 PM GMT (Updated: 25 Jan 2020 7:34 PM GMT)

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வண்டலூர், 

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வண்டலூர் தாசில்தார் வி.செந்தில் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி உயிரியியல் பூங்கா சிக்னல் வரை சென்று, மீண்டும் வண்டலூர் தாலுகா அலுவலகம் வந்தடைந்து நிறைவு பெற்றது.

பேரணியில் தேசிய வாக்காளர் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து தாசில்தார் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் மண்டல துணை தாசில்தார் சையத் அலி, கல்லூரி மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பீம்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் காமாட்சி மற்றும் ஆசிரியர்கள் ஜோசப், நாகபூசன், பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்த வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்திக் கொண்டு கோஷம் எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

இதில், மாணவர் காவல் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர்.குப்புசாமி, மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பின் தலைவர் மகேஷ்வரி, செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ். கவுஸ்பாஷா கலந்துக் கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

திருப்போரூர்

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை தேசிய வாக்காளர் தினத்தை கடைப்பிடிக்கும் விதமாக வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையம் வழியாக இள்ளலூர் சந்திப்பு வரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று முடிந்தது

இதில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். தேர்தல் துணை வட்டாட்சியர் ஜீவிதா, மண்டல துணை வட்டாட்சியர் சுகுமாரன், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரணியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story