அரசு வழங்கிய செட்டாப் பாக்சை பயன்படுத்தாமல் இருந்தால் திரும்பி ஒப்படைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு


அரசு வழங்கிய செட்டாப் பாக்சை பயன்படுத்தாமல் இருந்தால் திரும்பி ஒப்படைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 12:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வழங்கிய செட்டாப் பாக்சை பயன்படுத்தாமல் இருந்தால் அவைகளை திரும்பி ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 250 அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்கள் பெற்றுள்ளனர். அவர்கள் மூலம் சுமார் 42 ஆயிரத்து 500 அரசு செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தியதும் அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி.க்கு சந்தா தொகை அதிகமாக இருந்ததால், சிலர் தனியார் டிஜிட்டல் நிறுவனத்திற்கு மாறிவிட்டனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை குறைத்தது. தற்போது தனியாரைவிட குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

செட்டாப் பாக்ஸ்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்கள் என்பது, பொதுமக்கள் கேபிள் ஒளிபரப்பினை மாத சந்தா கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு மட்டுமே தவிர செட்டாப் பாக்ஸ்களை உரிமை கோர இயலாது. எனவே அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. அதனால் அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்களை பொது மக்கள் பயன்படுத்தாமல் இருந்தால் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட், பவர் அடாப்டர் உள்ளிட்டவைகளை அந்த பகுதில் உள்ள அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடம் செட்டாப் பாக்ஸ்களை திரும்ப பெறும் போது அனைத்து உபகரணங்களையும் சேர்த்து வாங்கி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். உபகரணங்கள் இல்லை என்றால் அதற்கான பணம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் இருந்தே வசூல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story