குடியரசு தின விழா கொண்டாட்டம் - கலெக்டர் சிவராசு கொடி ஏற்றினார்


குடியரசு தின விழா கொண்டாட்டம் - கலெக்டர் சிவராசு கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 3:10 PM GMT)

திருச்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் சிவராசு தேசிய கொடியேற்றி, 21 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி,

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சமாதான வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டார். மேலும் காவல் துறையின ரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து 21 பயனாளிகளுக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 63 பேருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 115 பேருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். வருவாய்த்துறையில் 25 ஆண்டுகள் மாசற்ற பணியாற்றிய தாசில்தார்கள் பாத்திமா சகாயராஜ் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையுடன், பாராட்டு சான்றிதழ் பெற்றார்.

சிறப்பாக பணியாற்றிய ஊராட்சிகள் உதவி இயக்குனர் தண்டபாணி, தாசில்தார்கள் சத்தியமூர்த்தி, ஜவகர்லால் நேரு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் பாஸ்கர், முத்துசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார், கல்லக்குடி பேரூராட்சி செயல் அதிகாரி சாகுல்அமீது, செய்தி மக்கள் தொடர்பு துறை வேன் டிரைவர் ராமகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 137 பேர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.

விழாவில் மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா, மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக காந்திமார்க்கெட் அருகில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் கலெக்டர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

குடியரசு தினவிழாவையொட்டி காற்று மாசு படுவதை தடுத்தல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி சோமரசம்பேட்டையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

Next Story