“தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” - கனிமொழி எம்.பி. பேச்சு


“தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 26 Jan 2020 11:00 PM GMT (Updated: 26 Jan 2020 7:07 PM GMT)

ஆத்தூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மேலஆத்தூர் ஊராட்சி மன்றம் சார்பில் புன்னைசாத்தான்குறிச்சி விளையாட்டு மைதானத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரம் என்பது எத்தனையோ பேர் தங்கள் உயிரை தியாகம் செய்து பெற்றது. பெற்ற சுதந்திரத்தை நாம் பேணி காக்க வேண்டும் என்று இந்த கூட்டம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் முதன்முதலாக பெண்கள் உரிமைக்காக தமிழகத்தில் போராடியது திராவிட இயக்கம் தான். அதன்பின்னர் தான் பெண்களுக்கு வாக்குரிமை வந்தது.

ஆத்தூர் குளத்தில் அமலைச்செடிகளும், குப்பைகளும் குவிந்து காணப்படுகிறது. இதனை அரசு தூர்வார வேண்டும்.

இல்லாவிட்டால் தி.மு.க. சார்பில் தூர்வாரப்படும். 400 ஏக்கர் விவசாய நிலத்துக்கு பயன் அளிக்கும் இந்த குளம், தூர்வாரப்பட்டால் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர் நிதி போதாது. இங்கு 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு ரூ.2 கோடி வீதம் ரூ.12 கோடி பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்க வேண்டும்.

இந்த கூட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு இதனை கோரிக்கையாக வைக்கிறேன். இங்கு பெண்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் வைத்து உள்ளர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். ஏனென்றால் நாங்கள் சொன்னால் செய்து தரக்கூடிய அரசு இப்போது இல்லை. ஆனாலும் மக் களின் அத்தியாவசிய தேவைகள், அடிப்படை வசதிகளை போராடி பெற்று தருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களை உபயோகிக்க தடை உள்ளது. இதனை நாம் பின்பற்ற வேண்டும். பூமி வெப்பமயமாவதை தடுக்க மக்கள் மரம் வளர்க்க வேண்டும். சுற் றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஏற்க முடியாது. இதற்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் என்பதால், அவற்றை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். விளைநிலங்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது“ என்றார்.

அப்போது அவரிடம், ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி அணிவிக்கப்பட்டது. தற்போது நடந்த குடியரசு தின விழாவில் பாரதியாரின் தலைப்பாகையிலும் காவி அடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘அ.தி.மு.க.வே காவிக்குள் தான் உள்ளது‘ என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழு தலைவர் ஜனகர், ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி கருப்பசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரகுராம், மாரிமுத்து, ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின் முறை சங்க தலைவர் தாமோதரன், புன்னைசாத்தான்குறிச்சி ஊர் தலைவர் ஆதிநாராயணன், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஆழ்வார்திருநகரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முருகபெருமாள், மேலஆத்தூர் நகர செயலாளர் சின்னத்துரை பாண்டியன், கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கீர் முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story