குடியரசு தினவிழா கொண்டாட்டம்


குடியரசு தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 7:07 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

தென்காசி,

தெ.கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார் தேசிய கொடியேற்றி, தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, குடியரசு தின விழா உரையாற்றினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரிக்குழு உறுப்பினர் வி.தங்கவேல்நாடார், கல்லூரி முதல்வர் டி.ராஜன், தேசிய மாணவர் படை அதிகாரி என்.ஹரிபிரகாஷ், பேராசியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல் வலசையிலுள்ள ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வக்கீலுமான திருமலை முன்னிலை வகித்தார். மாணவி மகாலட்சுமி வரவேற்றார். கல்வி குழும இயக்குநர் வக்கீல் மிராக்ளின் பால்சுசி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்து பேசினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்று அளிக்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரிய. ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். மாணவி காவ்யா நன்றி கூறினார்.

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு கல்லூரி தாளாளர் எஸ்.டி.முருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எஸ்.நல்லையா துரைராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் தேசியக்கொடி ஏற்றிவைத்தார். மாணவர்கள் சம்பத்குமார், அரவிந்தன், மாணவிகள் பாலாஸ்ரீ, அபிசாகு, வர்ஷாதேவி ஆகியோர் குடியரசு தினவிழா உரைநிகழ்த்தினர். இவ்விழாவில்கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பனவடலிசத்திரம்

பனவடலிசத்திரம் அருகேயுள்ள திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், காஞ்சிபுரம் மகாயோகம் அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாட்டுநலத்திட்ட அலுவலர் அன்னராஜ் நன்றி கூறினார்.

களப்பாளங்குளம் டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தலைமை ஆசிரியர் காசிப்பாண்டியன் பரிசுகளை வழங்கினார். முன்னதாக பள்ளி ஆசிரியை அனிதா வரவேற்று பேசினார்.

மேலநீலிதநல்லூர் பசும்பொன்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு கல்லூரி நிர்வாகி சரளாதேவி இளங்குமரன் தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பனவடலிசத்திரம், வன்னிக்கோனேந்தல், தேவர்குளம், மேலஇலந்தைக்குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி, புளியம்பட்டி, மருக்காலங்குளம், குருக்கள்பட்டி, நடுவக்குறிச்சி, வெள்ளாளன்குளம், மேலநீலிதநல்லூர், சூரன்குடி, பெரியகோவிலான்குளம், சொக்கலிங்கபுரம், பலபத்திராமபுரம் ஆகிய ஊர்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திசையன்விளை

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் துணை முதல்வர் எலிசபெத் தேசிய கொடியேற்றினார். பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். முதலில் மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தி கொடிப்பாடல் பாடினர். மாணவி கலைவாணி தேச தலைவர்கள் பற்றி சிறப்புரையாற்றினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

திசையன்விளை அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரியில் குடியரசு தினவிழா நடந்தது. கல்லூரி சேர்மன் வி.எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக இந்தியா சிமெண்ட்ஸ் கப்பல் பிரிவு துணை தலைவர் நாதன் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி பேசினார்.

விழாவில் கல்லூரி முதல்வர் ஜெரால்டு ராஜன், கேப்டன் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி, டீன் கேப்டன் டெரன்ஸ், விடுதி காப்பாளர்கள் பாலகிருஷ்ணன், பனிமயராஜ், முத்துச்செல்வம், தொடர்பு அதிகாரி பிரின்ஸ் பிரேம்குமார், எஸ்டேட் அதிகாரி கிஷோர் உள்பட பலர் செய்திருந்தனர்.

ஆழ்வார்குறிச்சி

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அதிகாரி நெல்லை நாயகம் கலந்து கொண்டு, தேசியக்கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மாணவர்களின் யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி தகவல் தொழில் நுட்பத்துறை ஆசிரியை ஜெயவள்ளி வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுந்தரம் செய்திருந்தார்.

செங்கோட்டை விஸ்வநாதபுரம் ட்ரஸர் ஐலண்ட் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி செயலாளர் முகமது பண்ணயார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் சமீமா பர்வீன் சிறப்புரை ஆற்றினார். தாளாளர் ஷேக் செய்யது அலி வாழ்த்துரை வழங்கினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

சேரன்மாதேவி

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் மரியஹெலன் சாந்தி தேசியக்கொடி ஏற்றினார். குடியரசு தினவிழா குறித்து ஆங்கிலத்தில் மாணவி ஜெயஸ்ரீயும், தமிழில் மாணவன் கண்ணனும், இந்தியில் ஜெரால்டும் உரையாற்றினர். மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவை முன்னிட்டு உதவி கலெக்டர் பிரதிக் தயாள் தேசியக்கொடி ஏற்றினார். இதில் தாசில்தார் சந்திரன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் நல்லையா, மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் ஹமீதா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் தலைமை டாக்டர் சாந்தகுமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் டாக்டர்கள் அருணாசலம், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் எஸ்.டி.முருகேசன் தேசியக்கொடி ஏற்றினார். கல்லூரி முதல்வர் காந்திராமன், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story