கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் மனைவியை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவர்


கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் மனைவியை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவர்
x
தினத்தந்தி 26 Jan 2020 11:00 PM GMT (Updated: 26 Jan 2020 8:02 PM GMT)

வேறு ஒரு பெண்ணுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயல் கன்னியப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 38). இவர், சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி திலகம் (36). இவர், அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைகள் செய்து வந்தார். இவர்களுக்கு சஞ்சய்(12) என்ற மகனும், ஜனனி(11) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு குடும்பத்தகராறில் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மதுரவாயல் போலீசாருக்கு ஜெயவேல் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு திலகத்தின் உடல் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. ஆனால் அவரது முகத்தில் காயம் இருந்தது.

இதையடுத்து திலகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், சந்தேகத்தின்பேரில் ஜெயவேலை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது அவர், கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

லோடு ஆட்டோ ஓட்டிவந்த ஜெயவேலுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் பெயரை, தான் ஓட்டிவரும் லோடு ஆட்டோவிலும் எழுதி வைத்து உள்ளார்.

கணவரின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்த திலகம், அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி கணவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்றும் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயவேல், திலகத்தை சரமாரியாக தாக்கினார். பின்னர் தலையணையால் அவரது முகத்தில் வைத்து அமுக்கினார். பின்னர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

பின்னர் கொலையை மறைக்க, திலகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடகமாடியது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான ஜெயவேலிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story