உப்பளம் மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றினார்


உப்பளம் மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 11:00 PM GMT (Updated: 26 Jan 2020 8:23 PM GMT)

உப்பளம் மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்தது. விழா மைதானத்துக்கு காலை 8.30 மணியளவில் கவர்னர் கிரண்பெடி வந்தார்.

அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். நேராக விழா மேடைக்கு வந்த கவர்னர் கிரண்பெடி அங்கு தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

அதன்பின் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பினை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார். தொடர்ந்து மேடைக்கு திரும்பிய அவர் அரசு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளிகள், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை வழங்கினார்.

அதன்பின் காவல்துறை, காவல்படை அல்லாதோர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சமுதாய நலப்பணித்திட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. விழா மேடையில் நின்றவாறு அணிவகுப்பு மரியாதையை கவர்னர் கிரண்பெடி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அரசுத்துறைகளின் சாதனையை விளக்கும் வகையில் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடத்தியவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பரிசு வழங்கினார். இறுதியாக தேசியகீதத்துடன் விழா நிறைவடைந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், சங்கர், செல்வகணபதி, முன்னாள் எம்.பி. ராமதாஸ் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், இயக்குனர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உப்பளம் மைதானத்தில் விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். அங்கு நடந்த குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story