முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க சித்தராமையா வலியுறுத்தல்


முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:49 PM GMT (Updated: 26 Jan 2020 10:49 PM GMT)

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேரை தீர்த்துக்கட்டுவோம் என்று கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் குமாரசாமி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சேத்தன், மடாதிபதி நிஜகுனநந்தா சுவாமி உள்பட 15 பேரை தீர்த்துக்கட்டுவதாக ஒரு கொலை மிரட்டல் கடிதம் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட 15 பிரபலங்களை கொலை செய்வதாக கையெழுத்து இல்லாத ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அரசு தீவிரமாக கருதி, விசாரணை நடத்தி கடிதம் எழுதியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயமான சூழலை உருவாக்கி கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பறிக்க விரும்புபவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

அந்த கொலை மிரட்டல் கடிதத்தில் குமாரசாமி மட்டுமின்றி நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சேத்தன் மற்றும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பெலகாவி மடாதிபதி நிஜகுனநந்தா சுவாமி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மைசூருவில், காஷ்மீரை விடுவியுங்கள் என்ற வாசகத்துடன் பதாகையை வைத்திருந்த பெண்ணுக்கு ஆதரவாக கோர்ட்டில் நான் வாதாட முடியாது. ஏனென்றால் எனது வக்கீல் உரிமம் நீண்ட காலத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்களுக்கு எனது ஆதரவு உண்டு. இதில் யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மடாதிபதி நிஜகுனநந்தா சுவாமியை கொலை செய்வதாக கோழைகள் கடிதம் வெளியிட்டுள்ளனர். அதில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story