குடியரசு தினவிழாவில் ரூ.56½ லட்சம் நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்


குடியரசு தினவிழாவில் ரூ.56½ லட்சம் நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 27 Jan 2020 12:41 AM GMT)

குடியரசு தினவிழாவில் ரூ.56½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினய் வழங்கினார்.

மதுரை, 

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக 71-வது குடியரசு தினவிழா ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன், மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் வினய் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை, ஊர்க்காவல்படை, தீயணைப்பு படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 177 பேருக்கு ரூ.56 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உடன் இருந்தார். முன்னதாக கலெக்டர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

147 போலீசாருக்கு முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட விருதுகளையும், 74 போலீசாருக்கு சிறந்த போலீசாருக்கான பதக்கங்களையும் கலெக்டர் வினய் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் சமூக சேவகர்கள் என 255 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். விழாவின் நாய்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கலைக்கல்லூரி, சவுராஸ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்து மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேகரன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 925 மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவர்கள் அனைவருக்கும் கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த விழாவில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஜோதி சர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story