டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: புகாரில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி


டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: புகாரில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2020 10:30 PM GMT (Updated: 27 Jan 2020 8:14 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது குல கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது. இதனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு குறித்து, தமிழக அரசு உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, அதனை முழுமையாக நாட்டுடைமையாக்க வேண்டும்.

இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு மக்களின் அனுமதியை பெற வேண்டியதில்லை என மத்திய அரசு கூறியிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்குரிய நிலங்களை கையகப்படுத்துவதில் விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story