மணமகள் அறைக்குள் புகுந்து துணிகரம்: சப்-இன்ஸ்பெக்டர் மகள் திருமண விழாவில் 40 பவுன் நகை கொள்ளை


மணமகள் அறைக்குள் புகுந்து துணிகரம்: சப்-இன்ஸ்பெக்டர் மகள் திருமண விழாவில் 40 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 27 Jan 2020 11:00 PM GMT (Updated: 27 Jan 2020 9:48 PM GMT)

பூந்தமல்லியில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் திருமண வரவேற்பு விழாவில் மண்டபத்தில் உள்ள மணமகள் அறைக்குள் புகுந்து 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, 

சென்னை அண்ணாநகர் மேற்கு, பாடி புதுநகர், 18-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கசுவாமி(வயது 57). இவர், கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகள் பிரதிபா பிரியதர்சினிக்கும், அய்யப்பன்தாங்கலைச்சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இருவீட்டாரையும் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து இரவில் மணப்பெண் அறைக்குச்சென்று பார்த்தபோது, அந்த அறையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்து இருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தனர்.

இதனால் மண்டபத்தில் இருந்த பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடுபாபு, இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையிலான போலீசார், கொள்ளை நடந்த மணமகள் அறைக்குள் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த சிறிய பீரோவில் மேல் அறையில் வைத்து இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் மட்டும் கொள்ளைபோனது தெரிந்தது. கீழ் அறையில் வைத்திருந்த சுமார் 50 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. கொள்ளையர்கள் கவனிக்காததால் அவை தப்பியது.

திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மண்டபத்தில் மணமக்கள் உறவினர்கள்போல் டிப்-டாப் உடையணிந்து வலம் வரும் 2 ஆசாமிகள், மணமகள் அறையை நோட்டமிடுகிறார்கள்.

அறையின் ஒரு கதவில் உள்பகுதியில் தாழ்ப்பாள் போடாமல் வெளிப்புறமாக பூட்டி உள்ளனர். இதனால் கதவை உள்ளே தள்ளியதும் தானாக திறந்து கொண்டது. பின்னர் மர்மஆசாமிகள் இருவரும் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மஆசாமிகளை தேடி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் மகளின் திருமணத்தில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story