ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 5:09 PM GMT)

ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க போவதாக அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த திட்டம் அறிவித்த மறுநாளே நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் 200 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் எதிர்க்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது, மக்களிடம் கருத்து கேட்காமல் எந்த ஒரு திட்டத் தையும் நிறைவேற்ற மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் எடுத்த ஜெம் லேபரட்டரி நிறுவனமும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் எண்ணத்தை மக்களின் போராட்டத்தால் கைவிட்டு விட்டு மாற்று இடம் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மத்திய அரசு நெடுவாசல் விடுத்து காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கொடுத்து திட்டத்தையும் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. மக்களிடம் கருத்து கேட்கவும் தேவையில்லை என அறிவித்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கண்டனம் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து குடியரசு தினத்தன்று மாவட்டத்தில் நடைபெற்ற 100-க்கும் மேற்பட்ட கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரியும், விவசாயிகளின் விரோத அ.தி.மு.க., பா.ஜ.க.வை கண்டித்தும் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் செல்லபாண்டியன், ரகுபதி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், இந்த திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். இதில் எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, மெய்யநாதன், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் பரணிகார்த்திகேயன் உள்பட தி.மு.க.வினர் மற்றும் ஹைட்ரோகார்பன் போராட்டக் குழுவினர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Next Story