தேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி


தேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 28 Jan 2020 10:30 PM GMT (Updated: 28 Jan 2020 6:39 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகி, பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் காட்டு யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம், லக்கசந்திரம், ஜார்கலட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையின் நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதேபோல தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி அணைக்கு செல்லக்கூடிய வழியில் இந்த ஒற்றை யானை சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story