டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 8:35 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற பிப்ரவரி மாதம் 22-ந்தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் “தேசம் காப்போம்” பேரணி நடைபெற உள்ளது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் இந்த பேரணி நடக்கிறது. தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகிற 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். இந்த கையெழுத்து படிவங்கள் அனைத்தையும் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.

மோடி அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று பொருள் இல்லை. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தின் கோட்பாட்டை சிதைக்கும் வகையில், மதசார்பின்மை என்கிற மகத்தான கோட்பாட்டை அளிக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தம் அமைந்து உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராடுவோம்.

பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களை சிதைப்பது, சிலைகளை உடைப்பது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலால் இத்தகைய செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதன் பின்னணியில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் உள்ளன. தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயலை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இத்தகைய குற்றச்செயல்களை தடுப்பதற்கு ஏற்ற வகையில், தனியே உளவு பிரிவு உருவாக்க வேண்டும். தனி போலீஸ் படை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் தொடர்பாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை நேரில் சந்தித்து எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி தங்களது அரசை இடையிடையே நிலைநாட்ட வேண்டும் என்று ஆளும்கட்சியினர் விரும்புகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியார் பற்றி பேசியதன் பின்னணியில் சங்பரிவார் அமைப்புகள் உள்ளதாக சந்தேகப்படுகிறோம்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாமல் இவ்வளவு துணிச்சலாக, ஊழல் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. டி.என்.பி.எஸ்.சி. தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் நீதி விசாரணை நடத்த முதல்-அமைச்சர் ஆணையிட வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story