எடியூரப்பா-பா.ஜனதா மேலிடம் பிடிவாதம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தில் காலதாமதம் ஏன்? பரபரப்பு தகவல்கள்


எடியூரப்பா-பா.ஜனதா மேலிடம் பிடிவாதம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தில் காலதாமதம் ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 28 Jan 2020 11:15 PM GMT (Updated: 28 Jan 2020 8:50 PM GMT)

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையில் 16 இடங்கள் காலியாக உள்ளன. கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் முடிந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இடைத்தேர்தல் நிறைவடைந்து சுமார் 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த எடியூரப்பா, 3 நாட்களில் மந்திரிசபையை விரிவுபடுத்துவதாக கூறினார். அந்த மூன்று நாட்களும் முடிந்துவிட்டன. இப்போது எடியூரப்பா, ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதன்படி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை. எடியூரப்பா டெல்லிக்கு செல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதம் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவதில் ஏற்படும் காலதாமதத்திற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. முதல்-மந்திரி எடியூரப்பா, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 12 பேரில் 11 பேருக்கு மந்திரி பதவி வழங்க அனுமதிக்குமாறு கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் பா.ஜனதா மேலிடமோ, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 7 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அவர்களை தவிர்த்து கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் கூறுவதாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்துள்ள எடியூரப்பா, தான் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாகவும், அதனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற அந்த 11 பேருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதற்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்க மறுத்து தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக உள்ளது. அதனால் கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி மேலிடத்தின் அனுமதியை பெற, எடியூரப்பா நாளை (வியாழக்கிழமை) டெல்லி செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

Next Story