ஈரோட்டில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது - மேலும் 8 பேருக்கு வலைவீச்சு


ஈரோட்டில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது - மேலும் 8 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Jan 2020 10:45 PM GMT (Updated: 29 Jan 2020 9:45 PM GMT)

ஈரோட்டில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு, 

ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி காலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள வயல்வெளியில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த காரில் 5 பேர் இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஈரோடு சென்னிமலைரோடு லட்சுமிகார்டன் பகுதியை சேர்ந்த மனோகரனின் மகன் மதன் (27), ஈரோடு சென்னிமலைரோடு பெரியதோட்டம் விவேகானந்தா நகரை சேர்ந்த சுரேஷ்குமாரின் மகன் தக்காளி விக்கி என்கிற விக்னேஸ்வரன் (24), சூரம்பட்டி நால்ரோடு கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்த முருகேஷின் மகன் சுள்ளான் விக்கி என்கிற விக்னேஸ்குமார் (23), சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ.காலனியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் முரளி என்கிற மெர்லின் என்கிற தினேஷ் (22), ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த மகேந்திரனின் மகன் திலீப்குமார் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் 5 பேரும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த 26-ந் தேதி இரவு நாகராஜை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட மதன் போலீசில் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனையும் செய்து வருகிறேன். என்மீது அடிதடி வழக்குகளும் உள்ளன. நான் எனது நண்பர்களுக்கு செலவுக்கு அடிக்கடி பணம் கொடுப்பேன்.

இந்தநிலையில் புத்தாண்டு அன்று வடிவேல் மெர்லி என்பவர் என்னிடம் தகராறு செய்தார். அவரை நான் அடித்துவிட்டேன். இதனால் வடிவேல் மெர்லி அவரது நண்பரான புறா சரவணன் என்கிற சரவணனிடம் சென்று சொன்னார். மேலும், சரவணன் என்னிடம் பலமுறை வந்து கடன் கேட்டு உள்ளார். நான் அவருக்கு கடன் கொடுக்க மறுத்து விட்டேன். இதனால் சரவணன் என்மீது கோபத்தில் இருந்து வந்தார். மேலும், என்னை கொலை செய்துவிடுவதாகவும் அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

எனவே சரவணனை கொலை செய்ய நான் திட்டமிட்டேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூரம்பட்டியில் உள்ள எனது அலுவலகத்தில் வைத்து எனது நண்பர்களான விக்னேஸ்வரன், விக்னேஸ்குமார், தினேஷ், அனீஸ், சுஜித் என்கிற பிரவீன்குமார், ரியாஸ், தமிழ்செல்வன், கலைசெல்வன், பாரூக், மணி, சியாம்பிரகாஷ், திலீப்குமார் ஆகிய 12 பேருடன் நான் திட்டம் தீட்டினேன். அப்போது நண்பர்களும் கொலை செய்ய உதவி செய்வதாக உறுதி அளித்தனர்.

கடந்த வாரம் திருநெல்வேலிக்கு சென்ற நான் ஒரு அரிவாளையும், 4 கத்திகளையும் வாங்கி எனது காரில் வைத்திருந்தேன். கடந்த 25-ந் தேதி சரவணனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, கேட்ட கடனை தருவதாக தெரிவித்தேன். இதற்காக அவரை கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் மறுநாள் வரசொன்னேன்.

அவர் வருவதற்கு முன்னதாக திட்டமிட்ட 13 பேரும் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் வாய்க்கால் கரையோரம் உள்ள வயல்வெளியில் 2 காரில்களில் சென்று ஆயுதங்களுடன் காத்திருந்தோம். காந்திசிலை பகுதிக்கு வந்த சரவணன் எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். அதற்கு வாய்க்கால் கரைக்கு வந்து பணத்தை வாங்கி கொள்ளும்படி தெரிவித்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். அப்போது நாகராஜ் என்பவர் ஸ்கூட்டரை ஓட்டிவர, கணேசன், சரவணன் ஆகியோர் பின்னால் உட்கார்ந்தபடி வந்தனர்.

அவர்கள் எங்களுக்கு அருகில் வந்து ஸ்கூட்டரை நிறுத்தினார்கள். அப்போது விக்னேஸ்குமார் கத்தியுடன் முன்னோக்கி சென்று சரவணனை குத்த முயன்றார். இதைப்பார்த்ததும் அவர்கள் 3 பேரும் சுதாரித்து கொண்டனர். கணேசனும், சரவணனும் வாய்க்காலில் குதித்து தப்பி சென்று விட்டனர். நாகராஜ் மட்டும் தனியாக ஓடி சென்றார். இதைத்தொடர்ந்து அவரை விரட்டி சென்ற நாங்கள் சரமாரியாக வெட்டி கொன்றோம்.

நாகராஜ் இறந்தபிறகு, அவர்கள் வந்த ஸ்கூட்டரை வாய்க்காலில் தள்ளிவிட்டோம். மேலும், நாங்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் வாய்க்காலில் வீசினோம். அதன்பின்னர் 2 கார்களில் அங்கிருந்து கரூர் தப்பி சென்றுவிட்டோம். என்னுடன் 4 பேர் உடனிருந்தனர். எங்களிடம் செலவுக்கு பணம் இல்லாததால் 27-ந் தேதி காலையில் ஈரோடு பிரப்ரோடு பகுதிக்கு வந்தோம். அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரை பிடித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரத்தை பறித்தோம். பின்னர் பள்ளிபாளையம் வழியாக தர்மபுரிக்கு சென்றோம். பணம் செலவாகிவிட்டதால், ஈரோடு கோர்ட்டில் சரண் அடையலாம் என்று வந்தபோது, வழியில் போலீசில் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு மதன் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 5 பேரையும் போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story