கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா - ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை மீட்டு தர கோரிக்கை


கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா - ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை மீட்டு தர கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 7:32 PM GMT)

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடம் இருந்து கட்டிய பணத்தை மீட்டு தரக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

திருக்கோவிலூரில் நகைக்கடை நடத்தி வந்த முரளி என்பவர், ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவானார். இதையடுத்து பணம் செலுத்தியவர்கள் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்து, போராட்டங்கள் நடத்தினர். இதைதொடர்ந்து தலைமறைவாக இருந்த முரளி மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் பணத்தை பறிகொடுத்தவர்களுக்கு இன்னும் போலீசார் பணத்தை மீட்டுத்தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி, கோ‌‌ஷம் எழுப்பினர். மேலும் தங்களிடம் மோசடி செய்த பணத்தை நகைக்கடை உரிமையாளர், வேறு நபர்களிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், அவர்களின் பெயர்கள் மற்றும் பணத்தின் மதிப்பு எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story