பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு: 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன? - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி கேள்வி


பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு: 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன? - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி கேள்வி
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 7:32 PM GMT)

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி கேள்வியை எழுப்பினர். மதுரை நரசிங்கத்தைச் சேர்ந்த வக்கீல் லூயிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன் மை செயலாளர் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்பித்துள்ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களில் அடுத்த 2 மாதத்தில் மறுதேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். சின்னஞ்சிறு வயதில் மாணவ, மாணவிகளை மறு தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பாதியிலேயே மாணவர்கள் பள்ளிப்படிப்பை கைவிடுவது அதிகரிக்கும். தரமான கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் கூட 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது.

இருந்தபோதும் தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் கல்வித்துறை தீவிரமாக உள்ளது.

எனவே தமிழகத்தில் நடப்பாண்டில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும், அவற்றை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் லஜபதிராய், “5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என மத்திய அரசின் கட்டாயக்கல்வி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொடக்கக்கல்வியில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கக்கூடாது என அதே சட்டத்தின் மற்றொரு பிரிவு தெரிவிக்கிறது. இந்த விதிகளுக்கு எதிராக பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். கல்வியைக்கண்டு அச்சம் ஏற்படும். ஏராளமான மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியிலேயே விட்டுவிட வாய்ப்புகள் அதிகம். சி.பி.எஸ்.இ. படிப்பில் கூட இந்த நடைமுறை கிடையாது. 5, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது தமிழகத்தில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே இந்த அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்“ என வாதாடினார்.

பின்னர் ஆஜரான அரசு வக்கீல், “மாணவர்களுக்கு தரமான அடிப்படைக்கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 5, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மறுதேர்வு நடத்தப்படும். பாதியிலேயே படிப்பை கைவிட வாய்ப்பில்லை“ என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “மறுதேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில், அந்த குழந்தையின் நிலை என்ன? கட்டாயக்கல்வி சட்டத்தில் தொடக் கக்கல்வியில் தேர்ச்சி என்பது கட்டாயம் கிடையாது என்றும், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனவும் முரண்பாடாக உள்ளதே?” என கேள்வி எழுப்பினர்.

மேலும் “இந்த வகுப்புகளில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பி திருத்தப்படுமா?” என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக மாநில அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story