வேதாரண்யத்தில், முல்லைப்பூ விளைச்சல் பனியால் பாதிப்பு - விவசாயிகள் கவலை


வேதாரண்யத்தில், முல்லைப்பூ விளைச்சல் பனியால் பாதிப்பு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 30 Jan 2020 10:45 PM GMT (Updated: 30 Jan 2020 7:32 PM GMT)

வேதாரண்யத்தில் முல்லைப்பூ விளைச்சல் பனியால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புகையிலை சாகுபடிக்கு மாற்றாக 80 ஆண்டுகளாக நடைபெற்று வரும் முல்லைப்பூ சாகுபடி இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த சாகுபடியை நம்பியுள்ள 10 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் அக்டோபர் வரை முல்லைப்பூ சீசனாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ, பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கடும் பனிப்பொழிவால் பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 2 டன் பூ மட்டுமே வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.

சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை பூ கிலோ ரூ.200 முதல் ரூ.800 வரை விற்பனை ஆகிறது. பல மாதங்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகும் முல்லைப்பூ ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டும் கிலோ ரூ. 1,000-க்கு விற்பனையாகும். தற்போது கிலோ ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகிறது. பூ அதிகம் விளையாததால் விலை அதிகரித்துள்ளது.

வேதாரண்யத்தில் தற்போது நிலவும் பனியால் முல்லைப்பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே அரசு நெல், கரும்பு, மஞ்சளுக்கு அறிவித்தது போல முல்லைப்பூ சாகுபடியால் பாதிக்கும் காலங்களில் விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நீண்ட கால கடனாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முல்லைப்பூவிற்கு நிரந்தர விலை கிடைக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு குழுக்களை ஏற்படுத்தி அந்த குழுவிற்கு குளிரூட்டப்பட்ட வாகனத்தை அரசு வழங்க வேண்டும்.

இந்த பனி காலத்தில் பூ விளைச்சல் பாதிக்கப்படுவதையும் அதை தடுப்பதற்கு உண்டான வழி குறித்தும் வேளாண்மைத்துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story