தானே - பன்வெல் இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை; மத்திய மந்திரி தொடங்கி வைத்தாா்


தானே - பன்வெல் இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை; மத்திய மந்திரி தொடங்கி வைத்தாா்
x
தினத்தந்தி 30 Jan 2020 11:40 PM GMT (Updated: 30 Jan 2020 11:40 PM GMT)

தானே - பன்வெல் இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவையை மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மும்பை, 

மும்பை மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட் - விரார் இடையே ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மத்திய ரெயில்வேயின் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் உள்ள தானே - பன்வெல் இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி வீடியோ கான்பரன்சிங் மூலம் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பிற்பகல் 3.48 மணிக்கு பன்வெலில் இருந்து தானே நோக்கி முதல் ஏ.சி. மின்சார ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலை பெண் மோட்டார் மேன் மனிஷா மாஸ்கே, கார்டு சுவேதா கோரே ஆகியோர் இயக்கினர்.

இதுதவிர பாந்திரா, கோரேகாவ், ஜோகேஸ்வரி, கிரான்ட் ரோடு, அந்தேரி உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் கட்டப்பட்ட நடைமேம்பாலங்கள், காட்கோபர், காமன் ரோட்டில் கட்டப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள், எல்.டி.டி. மற்றும் பன்வெல் ரெயில் நிலையத்தில் நவீனகழிவறைகள், தாதர், பைகுல்லா ரெயில் நிலையத்தில் ராட்சத மின்விசிறிகள், சி.எஸ்.எம்.டி. ரெயில்நிலைய சூரியமின் உற்பத்தி நிலையம், உல்லாஸ்நகர், அம்பர்நாத், கர்ஜத், சயான், மும்ரா, ஐரோலி உள்ளிட்ட பல ரெயில்நிலையங்களில் வை-பை வசதி போன்றவற்றையும் ரெயில்வே இணை மந்திரி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ரிமாட் மூலம் திறந்து வைத்தனர்.

விழாவில் மும்பை பொறுப்பு மந்திரி அஸ்லம் சேக், ராய்காட் பொறுப்பு மந்திரி அதிதி தட்காரே, எம்.பி.க்கள் அரவிந்த் சாவந்த், மனோஜ் கோடக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் தொடங்கப்பட்ட ஏ.சி. மின்சார ரெயில், பிப்ரவரி 3-ந் தேதி முதல் பன்வெல், வாஷி, நெருல் - தானே இடையே தினமும் 16 சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் பன்வெலில் இருந்து தானேக்கு காலை 5.44, மாலை 4.14, இரவு 8.52 மணிக்கும், நெருலில் இருந்து தானேக்கு காலை 7.29, 9.57, மாலை 5.54, 7.08 மணிக்கும், வாஷியில் இருந்து தானேக்கு காலை 8.45-மணிக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல தானேயில் இருந்து பன்வெல், நெருல், வாஷி ஆகிய பகுதிக்கு காலை 6.46, 8.08, 9.19, 10.40, மாலை 5.16, 6.29, இரவு 7.49, 9.54 ஆகிய நேரங்களில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

Next Story