குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது


குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 31 Jan 2020 10:49 PM GMT (Updated: 31 Jan 2020 10:49 PM GMT)

குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ரூ.150 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

நாகர்கோவில், 

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையொட்டி குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வங்கி கிளைகள் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில வங்கிகள் திறந்திருந்தாலும் ஒன்றிரண்டு உயர் அதிகாரிகள் மட்டுமே பணியில் இருந்தனர். ஆனாலும் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை.

இந்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் ரகுநாதன், அகில இந்திய வங்கிகளின் சம்மேளன மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் வனிதா, ஊழியர் சங்க உதவி பொதுச்செயலாளர் விஷ்ணு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொதுச்செயலாளர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தால் வங்கிகளில் பணம் போட முடியாமலும், பணம் எடுக்க முடியாமலும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். பலர் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி தெரியாமல் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் நேற்று முதல் நாளில் மட்டுமே பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

மாதத்தின் கடைசி நாளான நேற்று குமரி மாவட்டத்தில் பல ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில ஏ.டி.எம். எந்திரங்கள் பணம் இல்லாமல் முடங்கின. இதனால் அந்த ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்த போராட்டம் தொடர்பாக வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கூறியதாவது:-

இந்த போராட்டத்தில் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். குமரி மாவட்டத்தில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் மொத்தம் 246 உள்ளது. இவற்றில் 1,400 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவருமே எங்களது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் அனைத்து வங்கி கிளைகளும் மூடப்பட்டது என்று சொல்லலாம். ஒருசில வங்கி கிளைகள் திறந்திருந்தன. அவற்றில் உயர் அதிகாரிகள் ஒன்றிரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்தனர். ஆனால் பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை. வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் வைப்பது தனியார் நிறுவனங்களாக இருந்தாலும், பணம் கொடுப்பதற்கு ஊழியர்களோ, அதிகாரிகளோ இல்லாததால் பல ஏ.டி.எம்.கள் நேற்று மதியத்தில் இருந்து பணம் இல்லாமல் இருக்கின்றன. 

இன்றும் (சனிக்கிழமை) எங்களது 2-வது நாள் போராட்டம் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 3-ந் தேதி தான் மீண்டும் வங்கிகள் செயல்படும். முதல் நாளில் மட்டும் ரூ.150 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளான இன்றும் ரூ.150 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story