பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 31 Jan 2020 11:05 PM GMT (Updated: 31 Jan 2020 11:05 PM GMT)

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எம்.டி. - பன்வெல் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மத்திய ரெயில்வேயின் பைகுல்லா - வித்யாவிகார் இடையே ஸ்லோ வழித்தடத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 10.42 மணி முதல் பிற்பகல் 3.44 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் பைகுல்லா - வித்யா விகார் இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரெயில்கள் பரேல், தாதர், மாட்டுங்கா, சயான், குர்லா ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நிற்கும். சின்ச்போக்லி, கரி ரோடு, வித்யா விகார் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. பயணிகள் சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் அங்கு செல்ல முடியும்.

மேலும் பராமரிப்பு பணியையொட்டி நாளை மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

துறைமுக வழித்தடத்தில் குர்லா - வாஷி இடையே காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.08 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது.

எனினும் இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - குர்லா, வாஷி - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story