சாலையில் கழிவுநீர் தேங்கி இருந்ததை தட்டிக்கேட்டதால் தகராறு 4 பேருக்கு அடி-உதை


சாலையில் கழிவுநீர் தேங்கி இருந்ததை தட்டிக்கேட்டதால் தகராறு 4 பேருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 1 Feb 2020 10:45 PM GMT (Updated: 1 Feb 2020 7:46 PM GMT)

திருவள்ளூர் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி இருந்ததை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அடி-உதை விழுந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வீரராகவபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் லோகேஷ் (வயது 28). நேற்று முன்தினம் லோகேஷ் வேலையின் காரணமாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தன் வீட்டின் அருகே வீட்டுக்கு செல்லும் வழியில் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் தேங்கி நின்றது. இதுகுறித்து லோகேஷ், முருகனிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் தனது உறவினர்களான ராஜு, முருகனின் மனைவி லாவண்யா ஆகியோர் சேர்ந்து லோகேசை தகாத வார்த்தைகளால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் அடித்து உதைத்தனர்.

இதை தடுக்க வந்த லோகேசின் மனைவி சரஸ்வதி, தாயார் மஞ்சுளா, உறவினர் சந்திரலேகா ஆகியோரையும் அவர்கள் தாக்கி உள்ளனர். இதுகுறித்து லோகேஷ் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் முருகன், ராஜு, லாவண்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Next Story