கீழத்தானியத்தில் ஜல்லிக்கட்டு 737 காளைகள் சீறிப்பாய்ந்தன; 26 பேர் காயம்


கீழத்தானியத்தில் ஜல்லிக்கட்டு 737 காளைகள் சீறிப்பாய்ந்தன; 26 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 7:24 PM GMT)

கீழத்தானியத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 737 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 26 பேர் காயமடைந்தனர்.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள கீழத்தானியத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி மாவயல் காட்டு அய்யனார் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 264 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

26 பேர் காயம்

காளைகள் முட்டியதில் பிரான்மலையை சேர்ந்த செல்வராஜ் (வயது 23), மதுரையை சேர்ந்த ராஜீ (30) மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் வெள்ளையண்டி பட்டியை சேர்ந்த அழகன் (67), கல்லாங்குத்தையை சேர்ந்த நல்லக்குட்டி (70), ரவி (27), செல்வா (32), மாத்தூரை சேர்ந்த பாலு (25) உள்பட 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மேல்சிகிச்சைக்காக அழகன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், நல்லக்குடி பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் ரொக்கப்பணம், பீரோ, கட்டில், வேட்டி, குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை காண இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெசிகுமார், பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு, துணை தாசில்தார்கள் வெள்ளைச்சாமி, ராஜா, பிரகா‌‌ஷ் மற்றும் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், காரையூர், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கீழத்தானியம் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story