சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டிரைவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி அரசு மருத்துவமனை தனிவார்டில் தீவிர சிகிச்சை


சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டிரைவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி அரசு மருத்துவமனை தனிவார்டில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 7:29 PM GMT)

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டிரைவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவருக்கு அரசு மருத்துவமனை தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செம்பட்டு,

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் தங்கி உள்ள வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்பி கொண்டு இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ெகாரோனா வைரஸ் அறிகுறி

இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபிறகு, மருத்துவ பரிசோதனைக்காக காத்து இருந்தனர். ஒவ்வொரு பயணியையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்த தவமணி என்பவரது மகன் அருண்(வயது 27) என்பவருக்கு கடுமையான காய்ச்சலுடன் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். அங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம்

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற அருண் அங்கு டிரைவராக பணியாற்றி வருகிறார். சில நாட்களாகவே அவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் இருந்துள்ளது. இந்தநிலையில் அவர் தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சிங்கப்பூரில் இருந்து விடுமுறையில் வந்துள்ளார். தற்போது அவருக்கு மூச்சுத்திணறல் இல்லை. அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம். இதன் மூலம் அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் 105 டிகிரியில் இருந்து 100 டிகிரியாக குறைந்துள்ளது.

அவருடைய ரத்தம், சளி மாதிரியை விரைவில் புனேவில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு சோதனைக்காக அனுப்ப உள்ளோம். சோதனை முடிவு வந்தபிறகு தான் அவருக்கு ெகாரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பது உறுதியாக தெரியும். மற்ற வைரஸ் காய்ச்சல் போலவே கொேரானா வைரஸ் காய்ச்சலும் சரியாகி விடும். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். ெகாரோனா வைரஸ் தனிவார்டுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. கொரோனா வைரஸ் தமிழகத்தில் இதுவரை பரவவில்லை. அதேநேரம் வைரஸ் தொற்று இருந்தால் தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story