கடலூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; பெண் பலி பொதுமக்கள் பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு


கடலூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; பெண் பலி பொதுமக்கள் பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 8:40 PM GMT)

கடலூர் ஆல்பேட்டையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையை சேர்ந்தவர் ஜெயபால். இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி(வயது 40). நேற்று இரவு ஜெயபால் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகில் உள்ள சாலை வழியாக மெயின் ரோட்டுக்கு வந்தார்.

அப்போதுபுதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய ஜெயபால், வளர்மதி ஆகிய இருவரும் ஸ்கூட்டருடன் கீழே விழுந்தனர். இதில் பஸ்சின் சக்கரம் வளர்மதியின் உடலில் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். ஜெயபால் படுகாயமடைந்தார்.

கண்ணாடியை அடித்து நொறுக்கினர்

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஜெயபாலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அறிந்த ஜெயபாலின் உறவினர்களும் சம்பவ இடத்துக்கு வந்து வளர்மதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஆத்திரம் தாங்க முடியாத பொதுமக்கள் சிலர் பஸ்சின் முன் மற்றும் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் பலியான வளர்மதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story