கள்ளக்குறிச்சி அருகே, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி


கள்ளக்குறிச்சி அருகே, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 2 Feb 2020 9:45 PM GMT (Updated: 3 Feb 2020 3:01 AM GMT)

கள்ளக்குறிச்சி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜ்குமார்(வயது 11). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ராஜ்குமார், அதே பகுதியை சேர்ந்த நண்பர் பிரகாசுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் நோக்கி சென்று கொண்டிருந்தான். மோட்டார் சைக்கிளை பிரகா‌‌ஷ் ஓட்டினார். மலைக்கோட்டாலம் அருகே முன்னால் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த டிராக்டரை பிரகா‌‌ஷ் முந்த முயன்றார். அப்போது அந்த டிராக்டர் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராஜ்குமார், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பிரகா‌‌ஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story