5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 5:46 PM GMT)

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில அளவிலான 14-வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குனர் சுடலை கண்ணன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் வாசு வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று, போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் விழாவில் பேசியதாவது:-

தமிழக அரசு மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விளையாட்டில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்திற்கும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

சிறந்த வீரர்கள்

விளையாட்டில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களை தேர்வு செய்து, சிறந்த தொழில் நிறுவனங்களில், வேலை வாய்ப்பு வழங்க, 10 நிறுவனங்களை அணுகியுள்ளோம். உலகளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்த 25 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் மாத இறுதிக்குள் 8, 9-ம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவனின் வகுப்பறைக்குள் அவர்களின் இருக்கைக்கு எதிர்புறத்தில் கையடக்க மடிக்கணினி (டேப்) வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பொதுத்தேர்வு

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பிற்கு இப்போது கொண்டு வரப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறை, ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வுதான்.

தற்போது அதே பள்ளியில் ஆசிரியர்கள் கேள்வித்தாளை தயார் செய்து தேர்வு நடத்துவார்கள். ஆனால் அந்த முறையை மாற்றி, பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் மூலமாக கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பப்படும். மேலும் ஆசிரியர்களும் வேறு, வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள். இந்த இரண்டும்தான் மாற்றம். மற்றபடி அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெறுவார்கள். இதில் மதிப்பெண் பட்டியல் இருக்காது.

அச்சப்பட தேவையில்லை

இந்த திட்டம், மாணவர்களுக்கு எந்தவித மன அழுத்தத்தையும் தராது. இதன் மூலம் மாணவர்கள் 10-ம் வகுப்பு செல்லும்போது தங்குதடையின்றி தேர்வை எதிர்கொள்ள முடியும். எனவே, மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிரு‌‌ஷ்ணரெட்டி, முன்னாள் எம்.பி. அசோக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story