23 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்: தஞ்சை பெரியகோவிலில் நாளை கும்பாபிஷேகம்


23 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்: தஞ்சை பெரியகோவிலில் நாளை கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 7:08 PM GMT)

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் நாளை (புதன் கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டு களுக்கு பிறகு நாளை(புதன் கிழமை) நடக்கிறது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றது. கடந்த மாதம் 27-ந் தேதி யஜமான அனுக்ஞை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்து வருகின்றன.

முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1-ந் தேதி மாலையில் தொடங்கியது. 2-ந் தேதி காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும், 3-ந் தேதி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. யாகசாலை பூஜையை காண்பதற்கு தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணமாக உள்ளனர்.

2 லட்சம் பேர்

கோவில் நுழைவு பகுதி வழியாக உள்ளே செல்லும் பக்தர்கள் அனைவரும் கேரளாந்தகன் கோபுரத்தின் அருகே செல்லும் பாதையில் சென்று யாகசாலை பூஜையில் பங்கேற்று வருகின்றனர். யாகசாலை பூஜை தொடங்கிய முதல்நாளில் 50 ஆயிரம் பேரும், 2-ம் நாளில் 1 லட்சம் பேரும், 3-வது நாளான நேற்று மாலை வரையில் 50 ஆயிரம் பேரும் என 3 நாட்களில் 2 லட்சம் பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை(புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூைஜ நடக்கிறது. பின்னர் காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானமும், 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது.

பஞ்சமூர்த்திகள் வீதியுலா

இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெரியநாயகி, பெருவுடையாருக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. பெரியகோவில் சாலை, நீதிமன்ற சாலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை, தென்கீழ்அலங்கம் ஆகிய இடங்களில் புதிதாக தார்சாலை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது. இதுதவிர முக்கிய சாலைகளில் காணப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன.

சக்கர நாற்காலிகள்

கும்பாபிஷேகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக மேம்பாலம், நீதிமன்ற சாலை, மாவட்ட நூலகம், சீனிவாசபுரம் பாலம், மத்திய கூட்டுறவு வங்கி, தொப்புள்பிள்ளையார் கோவில், புதிய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், தொல்காப்பியர் சதுக்கம், ரெயில் நிலையம், சிவகங்கைபூங்கா, திலகர்திடல், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் 72 சக்கர நாற்காலிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தஞ்சை பெரியகோவிலில் மட்டும் 30 சக்கர நாற்காலிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பேட்டரியால் இயங்கும் 30 வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

அலங்கார வளைவு

கும்பாபிஷேக தினத்தன்று 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் தஞ்சை-திருச்சி சாலை, புதுக்கோட்டை-தஞ்சை சாலை, கும்பகோணம்-தஞ்சை சாலை, நாகை-தஞ்சை சாலையில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை நீதிமன்ற சாலை, பெரியகோவில் சாலை, காந்திசாலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை ஆகிய சாலைகளின் ஓரம் வரிசையாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மின்விளக்குகள்

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சுவரில் சிவனின் 108 தாண்டவங்களை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி முக்கிய தலைவர்கள், பழங்கால விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவையும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி பெரியகோவிலை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பெரியகோவில் மேம்பாலம் முதல் சோழன் சிலை வரையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வாகனங்களில் வரும் பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு நடந்தே வருகின்றனர். கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களின் வசதிக்காக தரைவிரிப்புகள் போடப்பட்டுள்ளன.

விழாக்கோலம்

கோவிலுக்குள் செல்லும் வழியில் மராட்டா நுழைவு வாயிலில் பக்தர்களையும், உடமைகளையும் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் ெதாடர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

இதனால் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

Next Story