கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு மருத்துவமனையில் தனி வார்டு திறப்பு


கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு மருத்துவமனையில் தனி வார்டு திறப்பு
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 8:30 PM GMT)

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு தனி வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.

புதுக்கோட்டை,

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில், அங்கு கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்ற தமிழர்கள் நாடு திரும்பி கொண்டு உள்ளனர். கல்வி பயில்வதற்காகவும், தொழில்சார்ந்த பணிகளுக்காகவும் சீனாவில் தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள மருத்துவக்குழுவினர் முழு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் அறிகுறி ஏதும் இல்லை என்று தெரிந்த பின்பே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து, நாள்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சீனாவில் இருந்து வந்து உள்ள 100 பேரும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் சுகாதாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு தனி வார்டை மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்தார். கொரோனா வைரஸ் அறி குறியுடன் பாதிக்கப்பட்டு யாரும் சிகிச்சைக்காக வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இரு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

6 பேர் கொண்ட மருத்துவக்குழு

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், சீனாவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் இதுவரையில் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனினும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடிப்படையில் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு தனி வார்டுகள் 2 தொடங்கப்பட்டு உள்ளது.

யாரேனும் அந்த காய்ச்சலின் அறிகுறியுடன் இங்கு அனுமதிக்கப்பட்டால் 6 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண் காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story