நெல்லையில் மர்ம சாவில் திடீர் திருப்பம்: வாயில் விஷம் ஊற்றி மூதாட்டியை கொன்றது அம்பலம் உறவினர் கைது


நெல்லையில் மர்ம சாவில் திடீர் திருப்பம்: வாயில் விஷம் ஊற்றி மூதாட்டியை கொன்றது அம்பலம் உறவினர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2020 11:15 PM GMT (Updated: 3 Feb 2020 11:11 PM GMT)

நெல்லையில் மர்ம சாவில் திடீர் திருப்பமாக வாயில் விஷம் ஊற்றி மூதாட்டியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி வெள்ளையம்மாள் (வயது 80). வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வெள்ளையம்மாள் தனியாக வசித்து வந்தார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், வயது முதிர்வு காரணமாகவும் இருளம்மாள் என்ற பணிப்பெண் கவனித்து வந்தார்.

வெள்ளையம்மாள் கடந்த 20-11-2019 அன்று வீட்டில் திடீரென்று மர்மமான முறையில் இறந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இறந்ததாக உறவினர்கள் கருதினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் செழியன் விசாரணை நடத்தினார். மேலும் பணிப்பெண் இருளம்மாளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

திடுக்கிடும் தகவல்கள்

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெள்ளையம்மாள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

வெள்ளையம்மாளிடம் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவர், நெல்லையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.24 லட்சம் முன்வைப்பு தொகை வைத்துள்ளார். வெள்ளையம்மாளின் உறவினர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் தேவராஜன் (58), அவரது மகன் ஜான்பிரகாஷ் (30). இவர்கள் 2 பேரும் வெள்ளையம்மாளை கடந்த சில ஆண்டுகளாக பராமரித்து வந்தனர்.

ஜான்பிரகாசுக்கு குழந்தை இல்லை. இதனால் மருத்துவ செலவுக்காக வெள்ளையம்மாளிடம் தேவராஜன் பணம் கேட்டு வந்தார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாயில் விஷம் ஊற்றி கொலை

இதில் ஆத்திரம் அடைந்த தேவராஜன், ஜான்பிரகாஷ் ஆகியோர் வெள்ளையம்மாள் வாயில் வயலுக்கு தெளிக்கும் பூச்சு மருந்தை (விஷம்) ஊற்றிக் கொலை செய்தது தெரியவந்தது. தேவராஜன், வெள்ளையம்மாள் இயற்கையாக இறந்ததாக உறவினர்களிடம் நாடகமாடினார். மேலும் வெள்ளையம்மாளுக்கு வயது ஆகி விட்டதால் அவரது சாவில் உறவினர்களுக்கும் சந்தேகம் வரவில்லை.

ஆனால், இதுபற்றி போலீசார் விசாரிக்க தொடங்கியதும் தேவராஜன் தனது மகன் ஜான்பிரகாசை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனால் போலீசார் வெள்ளையம்மாள் வழக்கை கொலை வழக்காக மாற்றினார்கள். மேலும் தேவராஜனை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டுக்கு தப்பி சென்ற ஜான்பிரகாசை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

வெள்ளையம்மாள் இறந்த பிறகு அந்த சொத்துக்கள் தேவராஜனுக்கு சேரும். ஆனால், அவசரப்பட்டு கொலை செய்ததால் அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story