“இணையதள ஆபாச படங்கள், குற்றங்கள் செய்ய தூண்டக்கூடியவை” உஷாராக இருக்க நடிகர் விவேக் அறிவுரை


“இணையதள ஆபாச படங்கள், குற்றங்கள் செய்ய தூண்டக்கூடியவை” உஷாராக இருக்க நடிகர் விவேக் அறிவுரை
x
தினத்தந்தி 4 Feb 2020 6:15 AM GMT (Updated: 4 Feb 2020 6:03 AM GMT)

“இணையதளங்களில் வெளியாகும் ஆபாச படங்கள் குற்றங்கள் செய்ய தூண்டக்கூடியவை” என்று ராஜபாளையத்தில் நடிகர் விவேக் கூறினார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரி வளாகத்தில், 2020 மரக்கன்றுகள் நடும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கல்லூரியும், சேத்தூர் திருவள்ளுவர் தமிழோசை மன்றமும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

கல்லூரி தாளாளர் சியாம் தலைமை வகித்தார். ஆசிரியர் வெள்ளத்துரை வரவேற்று பேசினார். கல்லூரி கமிட்டி தலைவர் சந்திரசேகர ராஜா, இந்திய மருத்துவ சங்க மாநில துணை தலைவர் கோதண்டராமன், கல்லூரி முதல்வர் ஜமுனா, டாக்டர் ராமசுப்பிரமணியன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்தூர் அய்யன்திருவள்ளுவர் தமிழோசை மன்ற நிறுவனர் அர்ஜுனன் வாழ்த்தி பேசினார். கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனரும் நடிகருமான விவேக், நடிகர்கள் சிங்கம்புலி, செல் முருகன், சென்னை மாநகர வடக்கு மண்டல போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகர் விவேக் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை சிறப்பு விருந்தினர்கள் நட்டு வைத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:-

10 வருடங்களுக்கு முன்பு புவி வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுங்கள் என மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சூப்பர் ஸ்டாராக விளங்கிய அப்துல் கலாம் தெரிவித்தார்.

நீங்கள் தொடங்குங்கள், உதவி வரும் என என்னை உற்சாகப்படுத்தினார். 2008-ல் தொடங்கிய மரம் நடும் பணியை தொடர்ந்து தற்போது வரை 33.20 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இத்தனை ஆண்டுகளில் எத்தனை மரங்கள் நட்டு வைத்தேன் என்பதை விட, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களிடம் மரம் நட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தேன் என்பதை பெருமையாக சொல்லி கொள்கிறேன். மரம் நடுவதற்கான குழுக்கள் ஆங்காங்கே உருவாகி உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேட்டி அளித்த நடிகர் விவேக் கூறியதாவது:-

பெற்றோர்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் செல்போன் மற்றும் நண்பர்கள் குறித்து பெற்றோர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளங்களில் வெளியாகக் கூடிய ஆபாச படங்கள் இலகுவாக குற்றங்கள் செய்ய தூண்டி விடக்கூடியவை. எனவே அதுகுறித்து மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

மரங்களை அழிப்பது என்பது இயற்கைக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுத்தும். அதே நேரத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய விஷயத்தை விட்டு விட முடியாது. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு மரம் வெட்டப்பட்டால் அந்த இடத்தில் 10 மரங்கள் நட வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றி ஒரு இடத்தில் வெட்டும் மரத்திற்கு ஈடாக மற்றொரு இடத்தில் மரங்களை நட வேண்டும். இது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அப்துல் கலாம் கூறிய 2020-ம் வருடம் தொடங்கிவிட்டது. இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சி மற்றும் முனைப்பு அனைவரிடமும் உள்ளது. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story