சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் பேட்டி


சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2020 12:18 AM GMT (Updated: 7 Feb 2020 12:18 AM GMT)

சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறினார்.

சேலம்,

சீனாவை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன் தலைமை தாங்கினார். சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் முன்னிலை வகித்தார்.

பின்னர் முகாமில் ஊழியர் ஒருவருக்கு பாதுகாப்பு கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று கையை நன்றாக கழுவினால் வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக 6 விதமாக கைகழுவும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன. பயிற்சி முகாமில் அரசு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரிவு

அதன்பிறகு டீன் பாலாஜிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக யாரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவில்லை. முன்னெச்சரிக்கையாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதில் 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இங்கு வெண்டிலேட்டர் உள்பட அனைத்து உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் 7 பேர் அடங்கிய நிர்வாக குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை. இதை தடுக்க பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு இல்லை

சுகாதாரத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:-

சேலத்தை சேர்ந்த பலர் சீனாவில் மருத்துவம் படித்து வருகின்றனர். மேலும் சிலர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தற்போது சேலத்திற்கு திரும்பி வந்து உள்ளனர். அதன்படி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இதுவரை சீனாவில் இருந்து சேலத்திற்கு 23 பெண்கள் உள்பட 59 பேர் வந்து உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

இருமல், காய்ச்சல், தும்மல் ஏதாவது இருந்தால் தொடர்பு கொள்ளும்படி அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அவர்களை தினமும் கண்காணித்து வருகிறோம். அவரவர் வீட்டிலேயே தனிமையாக இருக்க வலியுறுத்தி உள்ளோம். இந்த வைரஸ் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதன்படி ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 முறை கையை நன்றாக கழுவ வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story