கீழகொளத்தூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 7 பேர் காயம்


கீழகொளத்தூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 7 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Feb 2020 11:00 PM GMT (Updated: 8 Feb 2020 4:44 PM GMT)

கீழகொளத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகொளத்தூர் கிராமத்தில் தைப்பூசத்தையொட்டி நேற்று ஊரின் நடுவே உள்ள நடுத்தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அரசு தலைமை கொறடாவும், அ.தி.மு.க. அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை ராஜேந்திரன் கொடியசைத்து, தொடங்கி வைத்தார். காலை 9.30 மணி அளவில் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் வீரர்கள் களத்தில் இறங்கும் முன்பே உறுதிமொழி எடுத்துக்கொண்டு காளைகளை அடக்கத்தொடங்கினர்.

இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.

7 பேர் காயம்

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சைக்கிள், அண்டா, சில்வர்குடம், வெள்ளிக்காசுகள் மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. சில மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாட்டை பிடித்தால் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் ஆகியவற்றையும் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். அப்படி அறிவிக்கப்பட்ட மாடுகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட பரிசு மட்டுமின்றி மாட்டின் உரிமையாளர் அறிவித்த பரிசுகளையும் வழங்கினர்.இப்போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 210 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மொத்தம் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது

இதில் அருங்கால் கிராமத்தை சேர்ந்த சுதர்சன்(21) என்பவருக்கு மட்டும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை 9.30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டை மதியம் 12.15 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது என கூறி போலீசார் நிறுத்தினர். இந்த ஜல்லிக்கட்டில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், அ.தி.மு.க. கட்சியின் திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன், கீழகொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.


Next Story