பெண்களிடம் சங்கிலி பறிப்பு: மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி விரைவு


பெண்களிடம் சங்கிலி பறிப்பு: மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி விரைவு
x
தினத்தந்தி 10 Feb 2020 12:32 AM GMT (Updated: 10 Feb 2020 12:32 AM GMT)

புதுவை கோவில்களில் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப் படைபோலீசார்திருச்சி விரைந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை சுற்றுலா நகரமாகவும், ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது. விசேஷ நாட்களில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனை பயன்படுத்திக்கொண்டு மர்மகும்பல் நகை பறிப்பில் ஈடுபட்டு வருகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து பெண்கள் சிலர் புதுவைக்கு வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அவர்கள் குடும்ப பெண்கள் போல கோவிலுக்கு வந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி அருகில் இருக்கும் பெண்கள் அணிந்துள்ள நகையை பறித்து விட்டு மாயமா கிறார்கள்.

சங்கிலி பறிப்பு

புதுவை கருவடிக்குப்பம் செந்தாமரை நகரை சேர்ந்தவர் சுப்ரமணியனின் மனைவி தங்கம் (வயது 65). கடந்த 6-ந் தேதி பிரதோஷத்தை முன்னிட்டு கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலுக்கு சென்றார். அப்போது அவரது அருகே பெண்கள் சிலர் நின்று சாமிகும்பிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கம் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை நைசாக பறித்துச்சென்றனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈஸ்வரன் கோவில்

இதேபோல் லாஸ்பேட்டை சாந்திநகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த கங்காதரனின் மனைவி லதா (52) காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

அதேகோவிலில் சாமி கும்பிட வந்த செட்டித்தெருவை சேர்ந்த மூதாட்டி சமுத்திரவள்ளி (80) என்பவரின் தங்க சங்கிலியும் மாயமாகி இருந்தது.

திருச்சியை சேர்ந்தவர்கள்

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் சங்கிலி பறிப்பில் 3-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டதும், அவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் திருச்சி விரைந்துள்ளனர். 

Next Story