காரியாபட்டியில் கொடூர சம்பவம், வாளி தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற பெற்றோர் கைது


காரியாபட்டியில் கொடூர சம்பவம், வாளி தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற பெற்றோர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2020 11:30 PM GMT (Updated: 10 Feb 2020 9:11 PM GMT)

பிறந்து 11 மாதம் ஆன ஆண் குழந்தையை வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக தந்தையும் தாயும் கைது செய்யப்பட்டனர். கொலையை மறைத்ததாக அவர்களது குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அமல்ராஜ்(வயது24). இவரது மனைவி சுஷ்மிதா(19). இவர்களுக்கு 11 மாதத்தில் விகாஸ் என்ற மகன் இருந்தான். கடந்த 5-ந் தேதி வீட்டில் உள்ள தண்ணீர் வாளியில் விகாஸ் இறந்து கிடந்தான். குழந்தை தவறி விழுந்து இறந்து விட்டதாக சுஸ்மிதா போலீசாரிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மகன் சாவு தொடர்பான முதல் தகவல் அறிக்கையினை பெறுவதற்கு கணவனும் மனைவியும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது அவர்களது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை விகாசை 2 பேரும் கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. 2 பேரும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை வெளிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சுஷ்மிதாவின் சொந்த ஊர் காரியாபட்டி அருகே உள்ள திருமால்புதுப்பட்டி ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு அவர் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த மரிய லூகாஸ்(50) என்பவரது மகனான அமல்ராஜுடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்தது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. கர்ப்பத்துக்கு அமல்ராஜ் காரணம் என தெரிவித்த நிலையில் சுஷ்மிதாவின் தந்தை சூசைமாணிக்கத்தை (45) அழைத்து விவரம் கூறியதோடு சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.

பின்னர் இருவர் வீட்டிலும் பேசி சுஷ்மிதாவிற்கும் அமல்ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்துக்கு பிறகு கணவன் -மனைவியிடையே பிரச்சினை எழுந்தது. ஆண் குழந்தை பிறந்த நிலையில் அது தனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து அமல்ராஜ் கூறி வந்துள்ளார். குழந்தை பிறந்து 7 மாதங்களாகியும் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையை பார்க்க வரவில்லை. இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா புகார் அளித்துள்ளார். விசாரித்த போலீசார், அமல்ராஜை சுஷ்மிதாவிடம் சேர்ந்து வாழ சொல்லி அனுப்பி உள்ளனர்.

ஆனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வரவே இந்த பிரச்சினை மதுரை சரக டி.ஐ.ஜி. யிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் இருவரிடமும் சமரசபேச்சுவார்த்தை நடத்தி தைப்பொங்கலை முன்னிட்டு சுஷ்மிதாவை அமல்ராஜ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைக்குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்தபின்னரும் கணவர் வீட்டார் குழந்தையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. இதனால் குழந்தை மீது சுஷ்மிதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தனது தந்தை சூசைமாணிக்கத்திடம் முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அமல்ராஜ், சுஷ்மிதாவிடம் குழந்தையினால்தான் பிரச்சினை, எனவே குழந்தை விகாசை கொன்று விடு என்று கூறியதால் அமல்ராஜ் முன்னிலையில் சுஷ்மிதா குழந்தையை தண்ணீர் நிரப்பி வைத்திருந்த வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். உடனே இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சுஷ்மிதா இறந்து கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தை விகாஸ் தண்ணீரில் விழுந்து இறந்ததாக கூறியுள்ளார்.

இந்த திடுக்கிடும் தகவலை கணவனும் மனைவியும் வெளியிட்டதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையை மறைத்ததாக அமல்ராஜுன் பெற்றோரான மரியலூகாஸ், விமலா(47) ஆகியோரும் சுஷ்மிதாவின் தந்தை சூசைமாணிக்கமும் கைது செய்யப்பட்டனர்.

Next Story