செங்கோட்டை அருகே பயங்கரம் மூதாட்டி அடித்துக்கொலை மகள்-பேரன் உள்ப ட 6 பேர் கைது


செங்கோட்டை அருகே பயங்கரம் மூதாட்டி அடித்துக்கொலை மகள்-பேரன் உள்ப ட 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2020 10:55 PM GMT (Updated: 10 Feb 2020 10:55 PM GMT)

செங்கோட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகள், பேரன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகம்மது யூசுப் மனைவி மும்தாஜ் (வயது 65). அவருடைய மகன் அமீன்ஷா, மகள் ஆமீனாள். அவர்களில் முகம்மது யூசுப், அமீன்ஷா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் மும்தாஜ் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அமீன்ஷாவின் மகன் அப்துல் சலாம் (25) அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது தாயாருடன் தனியாக வசித்து வந்த இவர், பாட்டி மும்தாஜ் வீட்டுக்கு சென்று அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அப்துல் சலாம், மும்தாஜ் மகள் ஆமீனாள், அவருடைய உறவினர்களான அப்துல் ஜப்பார் (56), காதர் மீராசா (52), பாத்திமா பீவி (45) மற்றும் அப்துல் சலாமின் 17 வயது நண்பர் உள்ளிட்டோர் மும்தாஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவரிடம் அப்துல் சலாம் பணம் கேட்டு மிரட்டி தகராறு செய்துள்ளார். இதற்கு அப்துல் சலாமுடன் வந்தவர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அப்துல் சலாம், தனது பாட்டி என்றும் பாராமல் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மும்தாஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்துல் சலாம் உள்ளிட்ட 6 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மும்தாஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். மேலும், இந்த பயங்கர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அப்துல் சலாம், ஆமீனாள், அப்துல் ஜப்பார், காதர் மீராசா, பாத்திமா பீவி மற்றும் அப்துல் சலாமின் நண்பர் ஆகிய 6 பேரை பிடித்து கைது செய்தனர்.

அதிகாலையில் செலவுக்கு பணம் கேட்டு பாட்டியை, அடித்துக் கொன்ற பேரன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story