கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 11:15 PM GMT (Updated: 10 Feb 2020 10:59 PM GMT)

கந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் தலைமையில் நடந்தது. சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாபிள்ளைக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (37). கணவன், மனைவி இருவரும் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

இதில் சரஸ்வதி தனது கைப்பையில் மண்எண்ணெய் பாட்டிலை மறைத்து வைத்திருந்தார். பின்னர் அவர்கள் அதை எடுத்து திடீரென தங்களது உடல்களில் ஊற்றினர்.

பின்னர் சரஸ்வதி பையில் இருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தீப்பெட்டியை பறித்ததுடன் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

கந்துவட்டி கொடுமை

இதையடுத்து கார்த்திகேயன், சரஸ்வதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘தொழிலில் ந‌‌ஷ்டம் ஏற்பட்டதால் கார்த்திகேயன் சிலரிடம் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனிடையே கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்துள்ளனர்’ என்றார்கள்.

மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story