மராட்டிய பட்ஜெட் மார்ச் 6-ந் தேதி தாக்கல் சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு


மராட்டிய பட்ஜெட் மார்ச் 6-ந் தேதி தாக்கல் சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 11 Feb 2020 12:13 AM GMT (Updated: 11 Feb 2020 12:13 AM GMT)

மராட்டிய பட்ஜெட் மார்ச் 6-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மும்பை,

மராட்டிய சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித் பவார், சட்டமன்ற சபாநாயகர் நானா படோலே, மேல்சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆசிரியை அங்கிதா எரித்து கொல்லப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்படி மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24-ந் தேதி தொடங்கி மார்ச் 20-ந் தேதி முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 18 வேலைநாட்கள் கொண்டதாகும்.

இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் மார்ச் 6-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாளில் மராத்தி மொழியை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்குவதற்கான மசோதா நிறைவேற்றப்படுகிறது. அதேநாளில் மராத்தியை செம்மொழியாக அறிவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 5-ந் தேதி பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story