நெல்லை அருகே பஸ்–மினி லாரி மோதல்; 2 பேர் படுகாயம்


நெல்லை அருகே பஸ்–மினி லாரி மோதல்; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 12:58 PM GMT)

நெல்லை அருகே அரசு பஸ்–மினி லாரி மோதிக் கொண்டன. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை, 

நெல்லை அருகே அரசு பஸ்–மினி லாரி மோதிக் கொண்டன. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பஸ்–மினி லாரி 

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி நேற்று காலை 9 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் பஸ் வந்து கொண்டு இருந்தது.

அந்த சமயத்தில் பாளையங்கோட்டையில் இருந்து சேரன்மாதேவியில் உள்ள செங்கல் சூளைக்கு ஒரு மினிலாரி புறப்பட்டு சென்றது. இந்த மினி லாரியை சேரன்மாதேவியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 46) என்பவர் ஓட்டினார்.

மோதல் 

கோபாலசமுத்திரம் பகுதியைச் தாண்டி வந்த போது கண் இமைக்கும் நேரத்தில் பஸ், மினிலாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் மினி லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அதன் டிரைவர் ஆனந்தன் படுகாயம் அடைந்தார். மேலும் பஸ் சாலையோரத்தில் சரிந்த போது, அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சுத்தமல்லியைச் சேர்ந்த நடராஜன் (65) என்பவர் மீது பஸ் மோதியது. இதில் அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த பஸ் சாலையோரத்தில் சரிந்து நின்றது. இந்த சம்பவத்தில் பஸ், மினி லாரி, மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன.

இதைபார்த்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் வந்த பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story