புத்தக கண்காட்சியில் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை கலெக்டர் ஷில்பா தகவல்


புத்தக கண்காட்சியில் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2020 11:00 PM GMT (Updated: 11 Feb 2020 1:23 PM GMT)

நெல்லையில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

நெல்லையில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

புத்தக திருவிழா 

நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் புத்தக கண்காட்சியை 4–வது புத்தக திருவிழாவாக கொண்டாடினார்கள். இதையொட்டி அங்கு பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் 127 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சித்த மருத்துவ கல்லூரி சார்பில் மூலிகை கண்காட்சியும், மகளிர் சுயஉதவிக்குழு பொருட்கள் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகக்கண்காட்சி கடந்த 1–ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது.

புத்தக திருவிழாவையொட்டி தினமும் 24 மணி நேரமும் கல்லூரி மாணவ–மாணவிகள் சுழற்சி முறையில் புத்தகம் படித்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. புத்தக கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்தது. இதில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பார்வையிட்டு, புத்தகங்கள் வாங்கி சென்றனர். தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவ–மாணவிகளின் கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்கின்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிறைவு விழா 

இந்த புத்தக கண்காட்சி நிறைவு விழா நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும், புத்தக திருவிழா நன்கொடையாளர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், இந்த புத்தக திருவிழா சிறப்பான முறையில் நடந்ததற்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இந்த புத்தக கண்காட்சியில் ஆல்ரவுண்டராக பணியாற்றிய துணை போலீஸ் கமி‌ஷனர் சரவணனுக்கு பாராட்டுக்கள். இதில் சுமார் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பல லட்சம் பேர் வந்து பார்த்து சென்று உள்ளனர். இங்குள்ள நன்கொடை பாக்ஸில் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் அரசு நூலகங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மணிஸ்நாரணவரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, பயிற்சி உதவி கலெக்டர் சிவகுருபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூதாட்டிக்கு இலவச புத்தகங்கள் 

சேரன்மாதேவியை சேர்ந்த ராஜம்மாள்(வயது70) என்பவர் புத்தக கண்காட்சிக்கு வந்தவர், புத்தக அரங்கில் தனக்கு புத்தகம் வாங்க பணம் இல்லை. ஆனால் புத்தகத்தை படித்துக்கொள்கிறேன் என்று கூறி அரங்கத்தின் அருகில் நின்று படித்துக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த கலெக்டர் ஷில்பா, அந்த மூதாட்டி ராஜம்மாளுடைய புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை பாராட்டி அவருக்கு ஏராளமான புத்தகங்களை வாங்கி கொடுத்து, அவரை தனது காரில் அவருடைய வீட்டில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தார்.

Next Story