திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 11 Feb 2020 10:15 PM GMT (Updated: 11 Feb 2020 3:20 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி ஆகும்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி ஆகும்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் அம்ரித் தலைமை தாங்கினார்.

தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் ரோஜாலி சுமதா, செல்வராஜ், கோவில் ஆய்வாளர்கள் முருகன், சிவகலை பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.1.33 கோடி 

இதில் கோவில் நிரந்தர உண்டியல்களில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 508–ம், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 743–ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். மொத்தம் ரூ.1 கோடியே 33 லட்சத்து 61 ஆயிரத்து 251–யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

மேலும் தங்கம் ஒரு கிலோ 198 கிராமும், வெள்ளி பொருட்கள் 19 கிலோ 782 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் வெளிநாட்டு பண நோட்டுகள் 254–ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

Next Story