அரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அண்ணாசாலையில் உள்ள 2 சுரங்கப்பாதைகள் இணைப்பு பயணிகள் சாலையை எளிதாக கடக்க முடியும்


அரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துடன்   அண்ணாசாலையில் உள்ள 2 சுரங்கப்பாதைகள் இணைப்பு   பயணிகள் சாலையை எளிதாக கடக்க முடியும்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 5:52 PM GMT)

ஓமாந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் 2 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட்டு பயணிகள் சாலையை கடக்க எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னையில் சென்டிரல், எழும்பூர், விமானநிலையம், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர் பகுதிகளை இணைக்கும் வகையில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ரெயில்களை இயக்கி வருகிறது. அத்துடன் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகிறது. இந்த ஓரிரு மாதங்களில் இந்தப்பாதையும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சாரசரியாக தினசரி லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கையாளப்பட்டு வருகின்றனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் உள்ள சுரங்கப்பாதையை சுரங்க ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணியையும் செய்து வருகிறது. அதன்படி அண்ணாசாலையில் 2 சுரங்கப்பாதைகள் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ரெயில் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது. பொதுவாக இந்தப்பகுதி பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். அதனால் இங்கு பொதுமக்கள் ரோட்டை கடக்க வசதியாக இந்த சுரங்கப்பாதை அமையும்.

சுரங்க பாதைகள் இணைப்பு

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

அண்ணாசாலையில் உள்ள பெரியார்சிலை, அண்ணாசிலை (வாலாஜா சாலை சந்திப்பு) ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, அண்ணாசாலை தபால் நிலையம், அண்ணாசாலையில் கிரீம்ஸ் சாலை சந்திக்கும் ஆயிரம் விளக்கு சிக்னல், அமெரிக்கா துணை தூதரகம் அருகில் அண்ணாமேம்பாலம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் அண்ணாசாலையை கடக்க சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் பெரியார் சிலை, அண்ணா சிலை அருகில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. அதேபோல் தேனாம்பேட்டை அருகில் டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதாக கடப்பதுடன், சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடையவும் முடிவு செய்யப்பட்டது.

ஆக்கிரமிப்பு தடுக்க நடவடிக்கை

அதன்படி முதல் கட்டமாக பெரியார் சிலை, அண்ணாசாலை வாலாஜா சாலையில் உள்ள 2 சுரங்க பாதைகளும், நவீனப்படுத்தப்பட்டு, ஓமந்தூரார் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருவதற்கு எளிமைப்படுத்தப்படுவதுடன், அண்ணாசாலையையும் பொதுமக்கள் எளிதாக கடக்க முடியும்.

இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையம் வரும் பயணிகள் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி மிக எளிதாக பிளாட்பாரத்தை வந்து அடைய முடியும். அதே நேரத்தில் சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று வரவும் வசதியாக இருக்கும். நவீனப்படுத்தப்பட்ட சுரங் கத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்வதுடன், வியாபாரிகள் சுரங்கப் பாதையை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வரு கிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story