திருக்கோவிலூர் அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை


திருக்கோவிலூர் அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2020 10:00 PM GMT (Updated: 11 Feb 2020 10:52 PM GMT)

திருக்கோவிலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜெயப்பிரியா (வயது 29). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சண்முகம் தனது மனைவி, குழந்தை மற்றும் பெற்றோருடன் சென்னையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் சண்முகம் மற்றும் அவரது தந்தை பிச்சைக்காரன், தாயார் வசந்தா, தம்பி முருகன் ஆகியோர் ஜெயப்பிரியாவிடம் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்றும், அதற்கு உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரவேண்டும் என்றும் கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஜெயப்பிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் பெற்றோருடன் சேர்ந்து ஜெயப்பிரியாவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் ஆற்காட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் ஜெயப்பிரியாவின் தாய், சண்முகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு தனது பேரனை கொண்டு வந்து விடும்படி கூறியுள்ளார். அதற்கு சண்முகம் மறுப்பு தெரிவித்ததோடு, ஜெயப்பிரியாவை திட்டியதாக தெரிகிறது.இதனை அறிந்து மனமுடைந்த ஜெயப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெயப்பிரியாவின் தாய் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story