செம்மாங்குளம் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும்; சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கோரிக்கை


செம்மாங்குளம் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும்;  சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2020 10:15 PM GMT (Updated: 12 Feb 2020 1:28 PM GMT)

நாகர்கோவில் செம்மாங்குளம் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரியிடம், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் செம்மாங்குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் ரூ.11 லட்சம் செலவில் நடக்கிறது. அதுபோல் குளக்கரையோரம் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவிலும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நேற்று நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் சுகுமாரனை சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 செம்மாங்குளத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரர் பணிகளை ஆமை வேகத்தில் செய்து வருகிறார். மழைகாலம் வந்து விட்டால் பணிகளை மேற்கொள்ள முடியாதநிலை ஏற்படும். ஒழுகினசேரி பகுதி மக்கள் மீனாட்சி கார்டன் வழியாக வடிவீஸ்வரம், கோட்டார் ரெயில் நிலையங்களுக்கு செல்வதற்கும் வசதியாக அமையும். எனவே இந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைத்தேன். அவர் இம்மாத இறுதிக்குள் செம்மாங்குளம் சீரமைப்பு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் காரவிளை கால்வாய் மூலம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். மின்வாரியத்தின் சார்பில் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் காலை 8 மணிக்கு மின்தடையை ஏற்படுத்துகிறார்கள். இதனால் மாணவர்கள், அரசு, தனியார் அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் பாதிக்கப்டுகிறார்கள். எனவே 8 மணிக்கு பதிலாக 9 மணியாக மின்தடை நேரத்தை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story