கிணத்துக்கடவு அருகே பயங்கரம்: முறைதவறிய காதலால் வாலிபர் குத்திக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது


கிணத்துக்கடவு அருகே பயங்கரம்: முறைதவறிய காதலால் வாலிபர் குத்திக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2020 11:15 PM GMT (Updated: 12 Feb 2020 5:52 PM GMT)

கிணத்துக்கடவு அருகே முறைதவறிய காதல் பிரச்சினையால் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 22). மணமேடை அமைப்பாளர். அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மகன் மணிகண்டன் (18). ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர்.

இந்த நிலையில் மணிகண்டனின் சகோதரியை தினேஷ்குமார் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அண்ணன், தங்கை உறவு முறை என்று தெரிகிறது. இதனால் முறை தவறிய காதல் இது என்று கூறி, தினேஷ்குமாரை மணிகண்டன் கண்டித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். அப்போது மணிகண்டனின் சகோதரி செல்போனுக்கு தினேஷ்குமார் குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பியுள்ளார். இதை மணிகண்டன் பார்த்துவிட்டு தினேஷ்குமாரை மீண்டும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், தினேஷ்குமார் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு தாமரைக்குளம்-நல்லட்டிபாளையம் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி அருகே சென்றுள்ளார். அங்கு மணிகண்டனுக்கும், தினேஷ்குமாருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் தினேஷ்குமாரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை ஆம்புலன்சில் ஏற்றி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தினேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முறைதவறிய காதலால் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story