டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி: காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை வீரப்பமொய்லி பேட்டி


டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி:   காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை   வீரப்பமொய்லி பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2020 10:00 PM GMT (Updated: 12 Feb 2020 7:15 PM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை என்று வீரப்பமொய்லி கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

துல்லிய நடவடிக்கை

டெல்லியில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு காங்கிரசின் ஓட்டுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றுவிட்டது. ஏனென்றால் பா.ஜனதாவை கெஜ்ரிவாலால் தான் தோற்கடிக்க முடியும் என்று வாக்காளர்கள் கருதியுள்ளனர். காங்கிரசுக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்கள் நினைத்துவிட்டனர். காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியை கண்டு மிகுந்த கவலை அடைகிறோம்.

டெல்லி வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. டெல்லி தோல்வி ஒரு பாடம். அந்த பாடம் நாங்கள் கற்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்து கட்டமைக்க வேண்டும். இதற்காக துல்லிய “தாக்குதல்“ போல் துல்லிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மறுசீரமைக்க வேண்டும்

கட்சிக்கு ஒட்டுமொத்தமாக புத்துயிர் அளிப்பது அவசியம். இது தான் இதற்கான சரியான நேரம். கட்சியின் தோல்விக்கு ஒரு சில தலைவர்களை காரணமாக கூற முடியாது. தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க வேண்டும்.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

Next Story