பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள் கருத்தரங்கில், கலெக்டர் அன்பழகன் அறிவுரை


பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள் கருத்தரங்கில், கலெக்டர் அன்பழகன் அறிவுரை
x
தினத்தந்தி 12 Feb 2020 10:45 PM GMT (Updated: 12 Feb 2020 8:43 PM GMT)

பாரம்பரிய உணவை அனைவரும் உட்கொள்ளுங்கள் என கருத்தரங்கில், கலெக்டர் அன்பழகன் அறிவுரை வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் தோகைமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு தயாரிக்கப்படும் முறை குறித்தும், தரம் குறித்தும் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டும். உணவில் உள்ள கலப்படங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு அவற்றை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் என்பது குறித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவில் உள்ள கலப்படங்களை கண்டுபிடிக்க தெரிந்திருக்க வேண்டும். அன்றாடம் பயன் படுத்தும் டீத்தூள், உணவு எண்ணெய்கள், உணவு உப்புகள் போன்றவற்றை கலப்படம் இல்லாமல் வாங்க தெரிந்திருக்க வேண்டும். அரசு நியாயவிலை கடைகளிலும், கூட்டுறவு அங்காடிகளிலும் கிடைக்கக்கூடிய தமிழக அரசின் அம்மா உப்பில் அயோடின் அதிக அளவில் உள்ளது. எனவே, அதை அனைவரும் வாங்கி பயன் படுத்த வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் செய்யப்படும் கலப்படங்களை உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். குறிப்பாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களும், அவற்றிற்கு மாற்றாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்களும் மாணவ சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நமது பாரம்பரியத்தில் முக்கனிகளாக கருதப்படும் மா, பலா, வாழை ஆகிய கனி வகைகளில் மாம்பழத்தை கார்பைட் வைத்து பழுக்க வைக்கிறார்கள். வாழையில் புகைமூட்டம் போட்டு பழுக்க வைக்கிறார்கள். தர்ப்பூசணி பழம் செக்கச்சிவப்பாக இருக்க சிவப்பு நிறச் சாயம் ஊசி மூலம் ஏற்றப் படுவதாக அறியவருகின்றது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை நாம் உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் வரும். அதேபோல டீக்கடைகளில் உள்ள பால் பாத்திரத்தில், ஊற்றப்படும் தண்ணீர் நீர்த்துப்போகாமல் இருக்க ஒரு துணியில் ஜவ்வரிசி கட்டி வைக்கப்பட்டிருக்கும்.

கோழி வளர்ப்பில் எடையை அதிக அளவில் கூட்டிக்காட்டுவதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றது. கோழிக்குஞ்சானது 45 நாட்களில் சுமார் 1½ கிலோ இருக்கும். ஆனால், நமது நாட்டுக்கோழி முறையான வளர்ச்சி பெற 3 மாதம் ஆகும். கோழியை வறுக்க கேசரி பவுடர் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி எதை எடுத்தாலும் கலப்பட மயமாகிக்கொண்டிருக்கின்றது. அனைத்தும் நமது உடலுக்கு மிகுந்த தீமையை விைளவிக்க கூடியதாகும்.

எனவே, அனைவரும் நமது பாரம்பரிய உணவு முறையை அறிந்துகொண்டு பயன் படுத்த வேண்டும். நம் மண்ணில் விளையும் பொருட்களை சாப்பிட வேண்டும். உணவில் உள்ள கலப்படங்களை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உணவுப்பொருட்கள் தொடர்பாக 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய குறுந்தகட்டை கலெக்டர் வெளியிட்டார். இதில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசிதீபா, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம், தனியார் கல்லூரி முதல்வர் சகோ.அல்போன்ஸ் ரோஸ்லின்மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story