2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது - பரபரப்பு வாக்குமூலம்


2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 12 Feb 2020 11:00 PM GMT (Updated: 12 Feb 2020 8:55 PM GMT)

தம்மம்பட்டியில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மூலசெங்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 33). இவர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி திவ்யா(30). இவர்களுக்கு வர்னிகா(3), தன்ஷிகா(1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

இளையராஜா தனது குடும்பத்தினருடன் தங்கள் விவசாய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த 8-ந் தேதி அதிகாலையில் திவ்யா, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தனது இரு குழந்தைகளையும் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே கிணற்றில் குதித்ததில் முதுகில் அடிபட்டு படுகாயம் அடைந்த திவ்யா தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். இதற்கிடையில் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றதாக திவ்யா மீது தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யாவை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எங்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். 2-வது மகள் தன்ஷிகா பிறந்தவுடன், நான் குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்தேன். அப்போது எனது மாமியார் கலைச்செல்வியும், எனது கணவரும் எங்களுக்கு ஆண் வாரிசு வேண்டும் எனக்கூறி என்னை குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டாம் என்றனர்.

ஆனால் நான் தற்போதுள்ள சூழ்நிலையில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்து கவனிக்க முடியாது என கூறி குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டேன். அப்போதிருந்தே எனது மாமியாரும், கணவரும் என்னிடம் தகராறு செய்து வந்தனர்.

இந்த நிலையில் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது. இது குறித்து நான் அவரிடம் கேட்ட போது, அவர் ஆண் குழந்தை பெற்றுத்தர முடியவில்லை, இதை ஏன் கேட்கிறாய்? என்று கூறி என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் நான் மனம் உடைந்து காணப் பட்டேன்.

7-ந் தேதி இரவு எனது மாமியார் உனது முகத்தில் விழித்தால் பாவம், உன்னால் ஆண் வாரிசு பெற்று கொடுக்க முடியவில்லை என்று கடுமையாக பேசினார். ஏற்கனவே மனம் உடைந்து காணப்பட்ட நான் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன். எனக்கு பிறகு குழந்தைகள் அனாதையாகி விடக்கூடாது என்று அவர்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இதையடுத்து 8-ந் தேதி அதிகாலை நான் தூங்கிக்கொண்டு இருந்த எனது 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றேன். அங்கு குழந்தைகளை வீசி கொன்று விட்டு நானும் தற்கொலைக்கு முயன்றேன். அக்கம்பக்கத்தினர் என்னை காப்பாற்றி விட்டனர்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து தம்மம்பட்டி போலீசார் இளையராஜா மற்றும் அவருடைய தாயார் கலைச்செல்வி ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story