தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில், நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில், நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 9:14 PM GMT)

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆண்டிப்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடிவேல்நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் திவ்யா (வயது 20). இவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2-ம் ஆண்டு நர்சிங் பட்டய படிப்பு படித்து வந்தார். இதற்காக அவர், அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தார். மேலும் படிப்பு மட்டுமின்றி மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு திவ்யா விடுதிக்கு வந்தார். இதற்கிடையே நள்ளிரவு நேரத்தில் அவர் அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் க.விலக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

திவ்யாவின் பெரியப்பா நேற்று முன்தினம் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது. இதற்காக திவ்யா விடுமுறை கேட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விடுமுறை கிடைக்காததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story